Tuesday, June 21, 2011

சில்லுனு ஒரு காலை


விடிகாலை எழுந்திருப்பதே ஒரு சுகம், சிலருக்கு . அந்த சுகத்தை அதிகரிக்க , ஒரு நல்ல காபிக்குப் பின் விறு விறு என்று நடப்பது இருக்கே- அது தனீ சுகம். நடக்கும் பொழுதே பல விஷயங்களை பார்க்க முடிகிறது. தூக்கக் கலக்கத்தில் பால் வாங்கச் செல்லும் மாமாக்கள், அவசரமாக பேப்பர் போடும் சிறுவர்கள், இன்னமும் வாசலில் கோலம் போடும் மாமிகள் (வேலைக்குப் போகாதவர்கள் போல), புதிய காரை துடைக்கும் அவரை, பெருமையுடன் பால்கனியில் இருந்து பார்க்கும் மாமி... இப்படிப் பல பேர்கள்.. பல காட்சிகள் 

நடப்பவர்களில் பல ரகம் - புது shoe  , புது track suit, காதில் Ipod சகிதம், இறைக்க இறைக்க பத்து அடி ஓடியபின் அடி வயிற்றை அடிக்கடி தொட்டுப் பார்ப்பவர்கள், தம்பதி சகேதமாய் கிளம்பும் சிலர் திரும்பி வரும்பொழுது சண்டை போட்டுக் கொண்டு பத்து அடி தள்ளி நடந்து கொண்டிருப்பார்கள். இந்த காதில் IPOD மாட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை . நமக்கு யோசனை பண்ண , அசை போட ஆயிரம் சமாச்சாரம் இருக்கே !

காரிலோ, பைக்கிலோ போகும் பொழுது பார்க்க முடியாத பல சுவர்க் கிறுக்கல்களை கவனிக்கலாம்- அண்மையில் ரசித்தது- Tomorrow comes everyday, today is available only now-make the best use of it ! இவற்றை எல்லாம் பாத்துண்டே நடக்கும் போது நாற்பது   நிமிடம் போவதே தெரிவதில்லை. இதில் தினம் தினம் மாறிக்கொண்டே இருப்பது, கார் ஓட்டக் கற்றுக் கொள்பவர்கள். முன்பெல்லாம் நிறய ஆண்கள், சில பெண்கள்- வர வர கதை மாறுகிறது உண்மயிலேயே சந்தோஷமாய் இருக்கு- ஆனால் அங்கு அம்போவென்று காத்துண்டு இருக்கும் அப்பாக்களைப் பார்த்தால் தான் பாவமாயிருக்கு. வரப்போர நாட்களில் ஏறப்போகும் சாலைப் போக்குவரத்து போலிசுக்கு ஒரு சவாலாகத்தான் இருக்கப் போகிறது

No comments:

Post a Comment